இந்தியாவிற்கு புறப்பட்ட லுஃப்தான்சா ஜேர்மனிக்கே திருப்பி விடப்பட்டது; காரணம் என்ன?
வெடிகுண்டு மிரட்டலால் ஜேர்மனியில் இருந்து இந்தியாவின் ஐதராபாத் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் ஜேர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்துக்கு நேற்று (15) மாலை லுஃப்தான்சா ஏர்லைன்ஸின் எல்எச் 752 விமானம் புறப்பட்டுள்ளது.
ஐதராபாத்துக்கு செல்ல வேண்டிய விமானம்
இன்று தி (16) காலை ஐதராபாத்துக்கு செல்ல வேண்டிய விமானம், மீண்டும் பிராங்பேர்ட் விமான நிலையத்துக்கே திருப்பிவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்கட்ட தகவலை வெளியிட்ட லுஃப்தான்சா ஏர்லைன்ஸ், ஐதராபாத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது ஐதராபாத் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, ஜேர்மனிக்கு திருப்பிவிடப்பட்டது.
விமானத்துக்கு மிரட்டல் வந்தபோது, இந்திய வான்வெளிக்கு வெளியேதான் விமானம் வந்துகொண்டிருந்தது. மீண்டும் ஜேர்மனிக்கோ அல்லது அருகிலிருக்கும் விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் ஜேர்மனிக்கு திருப்பிவிடப்பட்டதாகவும், இன்று மீண்டும் ஐதராபாத்துக்கு பயணிகளை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாகவும் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.