கனடாவில் ஒரு கிராமமே தீக்கிரையான சம்பவம் மனித தவறா? வெடித்த சர்ச்சை
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lytton கிராமம் கடந்த வாரம் தீக்கிரையான சம்பவத்தின் முதன்மை காரணம் மனித தவறாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ உருவாகி Lytton கிராமமானது முற்றாக சேதமடைந்தது. பெரும்பாலான குடியிருப்புகள் இனி வசிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.
மக்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காட்டுத்தீ அணைப்பு சேவை அதிகாரிகள், வெளியிட்ட தகவலில், Lytton கிராமத்தில் இருந்தே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
Lytton காட்டுத்தீ விவகாரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மனித தவறாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Lytton கிராமத்தில் கடந்த புதன்கிழமை காட்டுத்தீ படர்ந்தது. அதன் முந்தைய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கனடா இதுவரை எதிர்கொண்டிராத வெப்பநிலை பதிவானது.
செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 49.6 C வெப்பநிலை பதிவானது. இதனால் மேற்கு கனடா வெப்ப அலையால் தவித்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் 180 பகுதிகளில் காட்டுத்தீ எரிந்த வண்ணம் உள்ளது.
வெளி மாகாணங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் உதவிக்கு வந்துள்ளனர்.
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் Lytton கிராமத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். 90% கிராமம் இந்த காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.