கனடாவில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட 13 பேர் கைது
கனடாவின் மொன்ரியல் நகரில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகரின் உணவக உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதாக இந்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொன்ரியல் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையில் சட்டவிரோத ஆயுதங்களும், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொன்றியல் பெரும்பாக பகுதியில் உள்ள ஏழு பிரதேசங்களிலும், வடக்கு மற்றும் தெற்கு கரையோரங்களிலும் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சோதனைக்கு கியூபெக் Quebec மாகாணக் காவல்துறையும், சட்டாகுவே Châteauguay காவல்துறையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களில் மொன்ரியல் உணவகங்கள் மீது தீவைத்தல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வன்முறைகள் இடம்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்ரியல் காவல்துறையின் படி, கைது செய்யப்பட்டவர்களில் மூவர் நேரடியாக இரண்டு உணவக உரிமையாளர்களிடம் மிரட்டல் விடுத்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.