துப்பாக்கியுடன் படகில் எல்லை தாண்டிய கனேடியர்: அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை
கனேடியர் ஒருவர் கயாக் படகில் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டியதாக கூறி அமெரிக்க அதிகாரிகளால் கைதான நிலையில், நீதிமன்ற விசாரணையை தற்போது எதிர்கொண்டுள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டா பிராந்தியத்தை சேர்ந்தவரான 32 வயது Tommy Plante என்பவரே கயாக் படகில் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டியவர்.
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வைத்து கைதாகியுள்ள அவர், தற்போது அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கிறார்.
ஏப்ரல் 19 அன்று மாலை நேரம் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மொன்டானா இடையே அமைந்துள்ள Koocanusa ஏரியில் பொலிசார் இவரை கண்டுள்ளனர்.
அவர்கள் எல்லைப்பாதுகாப்பு ரோந்து மைய்யத்தில் தகவல் தெரிவிக்க, கனேடிய எல்லையில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் உள்ளே தென் பகுதியில், அடுத்த நாள் காலை பொலிசார் இவரை சுற்றிவளைத்துள்ளனர்.
ஆனால் சட்டென்று துப்பாக்கி ஒன்றை எடுத்து, பொலிசாரை மிரட்டிய அவர், பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்துள்ளார்.
இதனையடுத்து, துரத்திச் சென்ற பொலிசார், சுமார் 8 கிலோ மீற்றர் வரை சென்று கைது செய்துள்ளனர்.
எட்மண்டன் பகுதியை சேர்ந்த அந்த நபர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைதல் மற்றும் தடைசெய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்கிறார் என தெரிய வந்துள்ளது.