வாகன நிறுத்துமிடத்தில் வாக்குவாதம்... கத்திக்குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் முதியவர் மீட்பு
எக்ளிண்டன் மேற்கு பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் மிக ஆபத்தான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வரும் ரொறன்ரோ பொலிசார், திங்கட்கிழமை இரவு சுமார் 8.38 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
வாகன நிறுத்துமிடத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனையடுத்து 60 வயதான அந்த நபரை கொடூரமாக கத்தியால் தாக்கிவிட்டு, மர்ம நபர் மாயமானதாக கூறப்படுகிறது.
மார்பு, கை உள்ளிட்ட பகுதிகளில் 6 முறை குத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் பின்னர் மேற்கில் கீல் தெரு நோக்கி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர் தற்போது லேசாக சுய நினைவுக்கு திரும்பியுள்ளார் எனவும், சிரமமின்றி மூச்சுவிடுகிறார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.