டொரொண்டோவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
டொரொண்டோ மேற்குப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எமெட்ட் அவென்யூ மற்றும் ஜேன் சட்ரீட் அருகே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த நபர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் போலீசார் வருவதற்கு முன்பே தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக தற்போது டொரொண்டோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்த தகவல்கள் உள்ளவர்கள் போலீசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.