கனடாவில் விளையாட்டு விபரீதமான சோகம்: ஒருவர் பலி
கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில், பனிச்சறுக்கு வாகனத்தை தண்ணீரின் மேல் ஓட்டி விளையாட முயன்ற 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை, ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரமாக அமைந்துள்ள 'துக்டோயாக்டுக்' பகுதியில் நிகழ்ந்துள்ளது.
கனடிய பொலிஸாரின் தகவல்களின்படி, இருவர் தங்களது பனிச்சறுக்கு வாகனத்தை ஆர்க்டிக் கடலின் ஒரு பகுதி தண்ணீரின் மேல் வேகமாகச் செலுத்தி, அப்படியே தண்ணீரைத் தாண்டி மறுபக்கம் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் கடலுக்குள் மூழ்கியுள்ளது. இதனை நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகையில், வாகனம் மூழ்கியதும் அதிலிருந்த ஒருவர் நீந்தி கரையேறிவிட்டதாகவும், ஆனால் மற்றைய நபர் தண்ணீருக்குள் இருந்து மேலே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அவசரக்கால மீட்புப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, கடலுக்குள் மூழ்கிய வாகனத்தில் இருந்து சுமார் 6 மீட்டர் தொலைவில் 32 வயதான அந்த நபரின் உடல் மீட்கப்பட்டது.
இந்தத் துயரமான மரணம் குறித்து மாகாண மரண பரிசோதகர் அலுவலகமும், பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக 'மௌன்டீஸ்' பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பனிச்சறுக்கு வாகனங்களை கோடை காலத்தில் தண்ணீரின் மேல் ஓட்டி சாகசம் செய்ய முயல்வது பெரும் ஆபத்தானது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.