நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்: அடையாளம் காணப்பட்ட 27 வயது இளைஞர்
ஸ்கார்பாரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கி குண்டுக்கு பலியான 27 வயது இளைஞரை ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் லாரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஸ்கார்பாரோ கோல்ஃப் கிளப் சாலைக்கு அருகிலுள்ள டவுன்ஹவுஸ் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், வாகனம் ஒன்றையும் அதனுள் ஆண் மற்றும் பெண் என இருவரையும் கண்டுள்ளனர்.
இருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அந்த ஆண் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
20 வயதைக் கடந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என்றாலும் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிய வந்துள்ளது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பிறகு, துப்பாக்கி குண்டுக்கு பலியான நபர் 27 வயதான Keron Brathwaite என்பதும் அவர் ரொறன்ரோவில் வசிப்பவர் எனவும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த தாக்குதலை முன்னெடுத்தவர்கள் தொடர்பில் பொலிசார் தகவல் ஏதும் வெளியிடவில்லை. கொலை சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகள் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உள்ளனர்.