கனடாவில் நாய்களை காப்பற்ற முயற்சித்த நபர் பரிதாப மரணம்
கனடாவின் மேப்பிள் ரிட்ஜ் பகுதியில், நெடுஞ்சாலையில் தப்பி ஓடிய தனது வளர்ப்பு நாய்களைப் பிடிக்க முயன்றபோது, வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று அதிகாலை சுமார் 5:45 மணியளவில், லவ்ஹீட் நெடுஞ்சாலையின் (Lougheed Highway) 26000 பகுதியில் ஒரு நபர் தனது நாய்களுடன் இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நாய்கள் நெடுஞ்சாலையை நோக்கி ஓடியுள்ளன. தன்னை நம்பியிருக்கும் வாயில்லா ஜீவன்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், அந்த நபர் உடனடியாக நெடுஞ்சாலையில் இறங்கி நாய்களை ஒன்று திரட்டிப் பிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மேப்பிள் ரிட்ஜ் RCMP அதிகாரி ஸ்டெபானி அன்ராவ் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நபர் தனது நாய்களைக் கட்டுப்படுத்த முயன்றபோதுதான் இந்த விபத்து நேரிட்டுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினார்.
விபத்து நடந்த பகுதியில் பொலிஸ் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக 240வது தெரு முதல் 272வது தெரு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தனது வளர்ப்புப் பிராணிகள் மீதான பாசத்தால் ஒரு நபர் தனது உயிரையே இழந்திருக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.