பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்: இலங்கை அரசு சொல்வது என்ன?
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
அரசு சொல்வது என்ன?
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரதமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசு சார்பாக, இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றமையை தாம் வரவேற்பதாகவும் தினேஷ் குணவர்தன கூறுகின்றார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான முழுமையாக தகவலை பெற்றுக்கொள்வதற்காக தாம் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
"பாகிஸ்தானில் தீவிரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை மூர்கத்தனமானது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதைப் பாராட்டும் அதே வேளையில், தீவிரவாத சக்திகள் சுதந்திரமாக உலவ அனுமதித்தால், அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
The brutal murder of Priyantha Diyawadana by extremist mobs in Pakistan is incomprehensible. While I appreciate PM @ImranKhanPTI's promise to bring those responsible to justice, we should be mindful that this could happen to anyone if extremist forces are allowed to act freely.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) December 3, 2021