நாய் ஒன்றின் சமர்த்தியத்தால் உயிர் பிழைத்த முதியவர்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மனிடோயோலின் தீவுப் பகுதியில் 89 வயதுடைய முதியவர் ஒருவர் அயல்வீட்டு நாயின் சமர்த்தியத்தால் உயிர் தப்பிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மிக்கி மெக்கின்னி (89) பிப்ரவரி 3ஆம் திகதி மாலை சுமார் 4.30 மணியளவில் தனது வீட்டின் வெளியில் இருந்த பனியை அகற்றும் இயந்திரத்தை நகர்த்தச் சென்றபோது தவறி விழுந்தார்.
கீழே விழுந்தபின் எழுந்து நிற்க பலமுறை முயன்றும் முடியவில்லை.“சில நேரத்திற்குப் பின்னர் நான் கவலைப்படத் தொடங்கினேன்,” என்று மெக்கின்னி தெரிவித்துள்ளார்.

அவரது பாக்கெட்டில் அவசர உதவி அழைப்புக் கருவி இருந்தும், அது இருப்பதை மறந்துவிட்டதாகவும் கூறினார். இறுதியில், “உதவி!” எனக் கத்தத் தொடங்கினார்.
அவரது குரலை அடுத்த வீட்டு நாயான ரோசா கேட்டு உடனே தனது எஜமானியான லிண்டா கில்கிரிஸ்டை எச்சரித்தது.
நாய் வழக்கத்திற்கு மாறாக கதவுக்குச் சென்று குரைத்ததாகவும் வெளியே யாரும் இல்லாத நிலையில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே காலணிகளை அணிந்து வெளியே சென்றேன். வெளியே சென்றதும் உதவி கேட்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது என லிண்டா கூறினார்.
லிண்டாவும் மற்றொரு அயலவரும் சேர்ந்து மெக்கின்னியை எழுப்ப முயன்றும் முடியாததால், உடனடியாக அம்புலன்ஸ் அழைக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய மெக்கின்னி, “இந்த முறை நான் தான் பாதிக்கப்பட்டவன். ரோசா என் உயிரைக் காப்பாற்றியவள்,” என்று நன்றியுடன் தெரிவித்தார்.
அடுத்த நாள் ரோசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிஸ்கட் கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார்.