கனடாவில் மசாஜ் நிபுணருக்கு விதிக்கப்பட்ட தடை
கனடாவின் வான்கூவரில் பணிபுரியும் மசாஜ் நிபுணர் ஒருவருக்கு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டேவிட் செயிண்ட் லோ என்ற மசாஜ் சிகிச்சை நிபுணருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் நோயாளியின் மார்பகத்தை மருத்துவ காரணமின்றி மற்றும் அனுமதியின்றி தொட்டதாக குறித்த நிபுணர் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி 3 அன்று நடந்த சிகிச்சை அமர்வில், மார்பக மசாஜ் செய்யும் நோக்கத்தை விளக்காததும், மருத்துவ காரணம் அளிக்காததும், நோயாளியின் அனுமதியை பெறாததும் குற்றமாகக் கண்டறியப்பட்டது.
மேலும், அவர் மேற்கொண்ட தொடுதல் ஒரு சிகிச்சை மசாஜ் முறையுடன் பொருந்தாமல், மார்பக பரிசோதனை போல் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், அவர் நோயாளியிடம் "வயக்ரா மற்றும் கஞ்சா" தொடர்பான தனிப்பட்ட, முறையற்ற கருத்துக்களையும் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளி கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி புகார் அளித்ததையடுத்து, விசாரணை முடியும் வரை செயிண்ட் லோவுக்கு பெண் நோயாளிகளைச் சிகிச்சையளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
2025 ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அவர் எல்லைகள், அனுமதி, நெறிமுறை மற்றும் தொழில் நெறிமுறைகள் குறித்த கூடுதல் கல்வி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு மட்டுமே அவர் மீண்டும் பெண் நோயாளிகளை சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 7 நாட்கள் பதிவு இடைநிறுத்தமும், $350 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.