வொஷிங்டனில் காகித ஆலையில் பயங்கர வெடிப்பு
வொஷிங்டனில் உள்ள காகித உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 2 பேரை காணவில்லை என்றும் தீயணைப்பு வீரர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வொஷிங்டனில் உள்ள லாங்வியூ பகுதியில் அமைந்துள்ள காகித உற்பத்தி ஆலையில் பெரிய இரசாயனத் தொட்டியொன்று செவ்வாய்க்கிழமை (26) திடீரென வெடித்துள்ளது.

அந்த இரசாயனத் தொட்டியில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட கெலன்கள் அளவுடைய கலவை தயாரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தொட்டி வெடித்திருக்கிறது.
அப்போது தொட்டியை உடைத்துக்கொண்டு அதில் இருந்த இரசாயன கலவை அப்பகுதியில் வெள்ளம் போல் ஓடியிருக்கிறது. அதில் காகிதங்களை ஏற்றிச் செல்லும் சிறிய ரக லொரிகள் கவிழ்ந்துள்ளன. மேலும் தொட்டி வெடித்ததில் கட்டடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட இரசாயனத் திரவம் அவ்விடம் முழுவதும் பரவியதில் அதில் சிக்கி, அவ்வேளை பணியில் ஈடுபட்டிருந்த ஆலைத் தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமற்போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (29) ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 2 பேரை காணவில்லை என்றும் 11 பேர் இதில் உயிரிழந்திருக்கக்கூடும் என மீட்புப் பணிக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.