தென் கொரிய விண்வெளித் தொழிற்சாலையில் பயங்கர வெடிப்புச் சம்பவம்
தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ஹன்வா ஏரோஸ்பேஸ்' தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில் இன்று (01) ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி ஐந்து ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தென் கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டு சுகாதார மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில்,
வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ளதால், பலியானவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த ஐந்து பேரில் இருவர் 20 வயதுடைய தற்காலிக ஊழியர்கள் என்பதுடன், அனைவரும் ஹன்வா நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆவர்.
உயிர் பிழைத்த இருவரில் ஒருவர் மிகக் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர்கள் இருவரும் வெடிப்பு நிகழ்ந்த உடனே தொழிற்சாலையிலிருந்து தாங்களாகவே தப்பியோடி உயிர் பிழைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் ஏவுகணை எரிபொருளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளிலிருந்து வெடிபொருட்களை அகற்றுவதற்காக, தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.