பாலஸ்தீனக் கொடியை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்த ஒட்டாவா நகர மேயர் வேட்பாளர் – நீல் சரவணமுத்து
ஒட்டாவாவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் பாலஸ்தீனத்தின் தேசியக் கொடி உயர்த்தப்படும் என மேயர் வேட்பாளர் நீல் சரவணமுத்து வாக்குறுதி அளித்துள்ளார்.
சர்வதேச மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும், கனடா அரசு பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், பிற நாடுகளின் தேசிய தினங்களைப் போலவே பாலஸ்தீனக் கொடியும் ஏற்றப்படுவது நியாயமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இவரது இந்த அறிவிப்புக்கு சக மேயர் வேட்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேயர் வேட்பாளர் அலெக்ஸ் லாசன் கூறுகையில், மாநகராட்சி கட்டிடத்தில் ஒட்டாவா, ஒன்டாரியோ மற்றும் கனடாவின் கொடிகள் மட்டுமே பறக்க வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் சர்வதேச விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய மேயர் மார்க் சட்க்ளிஃப், கொடியேற்றுவதற்கு மாநகராட்சியில் நீண்டகாலக் கொள்கைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி, நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிலேயே தனது கவனம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே நீல் சரவணமுத்துவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.