லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறைந்தது 7 பாடசாலைகளில் தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் (2026) முதல் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் 96 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்காக, என்ஃபீல்ட்டில் 34 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தட்டம்மையில் பாரிய தாக்கம் கொண்ட தொற்றானது பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் கற்கும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகமாக பாதிக்கிறது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.