சிறையை விட மோசம்... கழிவறைகள் பற்றாக்குறை முதற்கொண்டு கனடாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள்
கனடாவில், பண்ணைகளில் பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகி அவர்களது அவல நிலையை உலகுக்கு பறைசாற்றியுள்ளது. Migrant Rights Network and Food & Farmworkers Working Group என்ற அமைப்பு ஒன்று, புலம்பெயர் தொழிலாளர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த அமைப்பிடம், பெயர்வெளியிடாமல் தங்கள் மனக்குமுறல்களைக் கொட்டியுள்ளார்கள், கனடாவில் பண்ணை வேலைக்காக வந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்.
நவயுக அடிமைகள் போல் வாழ்கிறோம் என்று கூறும் ஒருவர், எங்களுக்கு நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களுக்குள் குளியலறைகள் கிடையாது, சுமந்துசெல்லும் கழிவறைகளைப் பயன்படுத்தவேண்டும் அல்லது போத்தல்களில்தான் சிறுநீர் கழிக்கவேண்டும் என்கிறார்.
இணையமும் கிடையாது, தொலைக்காட்சியும் கிடையாது, துணி துவைக்கவோ காயவைக்கவோ வசதி இல்லை... சிறையில் இருப்பதை விட மோசமாக உணர்கிறோம் என்கிறார் அவர்.
அவர்களது புகார்களுக்கு ஆதாரமாக புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்களில், ஒரே அறையில் தங்கியிருப்போர் தனிமைக்காக திரைகளை பயன்படுத்துவதையும், மோசமான கழிவறைகள் மற்றும் சமையலறைகளையும் காணலாம்.
ஏற்கனவே போதுமான இடவசதி, கழிவறை, குளியலறை என எந்த வசதிகளும் இன்றி இந்த தொழிலாளர்கள் அவதியுறும் நிலையில், 2020 அவர்களது நிலைமையை இன்னமும் மோசமாக்கிவிட்டிருக்கிரது. ஆம், ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அதற்கு காரணம், போதுமான இடவசதியின்றி அவர்கள் நெருக்கமாக வாழ்ந்ததுதான் என சுகாதார அமைப்புகளும் தெரிவிக்கின்றன. ஒரு அறையில் 60 பேர் வரை தங்கியிருப்பதாக ஒருவர் கூறியுள்ள நிலையில், அந்த 60 பேருக்கு ஒரு குளியலறையும் ஒரு சமையலறையும்தான் உள்ளன.
அத்துடன், பணி புரிவோர் வேலை செய்யும் இடத்தைவிட்டு வேறெங்கும் செல்ல அனுமதி கிடையாது. பலர் தங்கள் குடும்பங்களைக் காண ஏங்கிப்போயிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
எங்களுக்கு ஆடம்பர வீடு கேட்கவில்லை நாங்கள், கௌரவமாக தங்கியிருக்க ஒரு இடம், குடிக்கவும் குளிக்கவும் நல்ல தண்ணீர் ஆகியவற்றைத்தான் கேட்கிறோம் என்கிறார் மற்றொருவர்.
Migrant Workers Alliance for Change என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான Kit Andres கூறும்போது, பிரச்சினை மோசமான பண்ணைகள் அல்ல, மோசமான அமைப்பு என்கிறார்.
இப்போதைக்கு, இந்த தொழிலாளர்கள் தற்காலிக அனுமதியுடன் மட்டுமே கனடாவில் தங்கியிருப்பதால், அவர்களால் தங்கள் பிரச்சினைகள் குறித்து பேசக்கூட முடியாது. அப்படியே அவர்கள் பேசினால், அவர்கள் வேலையிழக்கும் அபாயம், வீடிழக்கும் அபாயம் மற்றும் நாடுகடத்தப்படும் அபாயங்களையும் எதிர்கொள்ள நேரிடும். அத்துடன், நிரந்தரமாக மீண்டும் கனடாவுக்கு வேலைக்காக வர முடியாத ஒரு நிலைமையும் உருவாகலாம் என்கிறார் அவர்.