செய்யாத குற்றத்திற்காக 23 ஆண்டுகள் சிறையிலிருந்த நபர் மரணம்
கனடாவில் செய்யாத குற்றத்திற்சாக 23 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டேவிட் மில்கார்ட் என்ற நபர் தனது 69ம் வயதில் கல்கரி வைத்தியசாலையொன்றில் உயிரிழந்துள்ளார்.
நியுமோனியா காய்ச்சல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் குற்றச் செயல் மற்றும் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டது.
சிறையிலிருந்து விடுதலையானதன் பின்னர் தவறாக தண்டிக்கப்படும் நபர்களுக்காக மில்கார்ட் குரல் கொடுத்து வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
1969ம் ஆண்டு வின்னிபிக்கில் தாதியொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மில்கார்ட் தண்டிக்கப்பட்டார்.
இதனால் தனது 16 வயது முதல் 39 வயது வரையிலான காலப் பகுதியை அவர் சிறையில் கழிக்க நேரிட்டது.
1997ம் ஆண்டு மரபணு பரிசோதனை முடிவு அறிமுகத்துடன் உண்மையான குற்றவாளி யார் என்பது கண்டறியப்பட்டது.
லெரி பிஷர் என்ற நபரே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக மரபணு பரிசோதனை முடிவுகள் மூலம் அம்பலமானது. குறித்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது எனினும் அவர் கடந்த 2015ம் ஆண்டு தனது 65ம் வயதில் சிறையிலேயே மரணித்தார்.
தவறாக தண்டிக்கப்பட்ட மில்கார்ட் தனது இளமைக் காலம முழுவதையும் சிறையிலேயே அனுபவிக்க நேரிட்டது.