பயணிகளுடன் பேருந்தை தீ வைத்து கொளுத்திய கொடூரம்: உடல்கருகி பலியான பலர்
மாலியில் பயங்கரவாதிகளால் பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ், அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறித்த பயங்கரவாத குழுக்கள் திடீரென்று பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளும் அதிகரிக்கும் பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மாலி ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குறித்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
சாங்கோ ஹெரி என்ற பகுதியில் சென்றபோது அந்த பேருந்தை இடைமறித்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து தப்பியோட முயற்சித்தனர்.
ஆனால், பயங்கரவாதிகள் பேருந்தின் கதவுகளை மூடி அதற்கு தீ வைத்தனர். இந்த கோர சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 33 பேர் உடல் கருகி பலியானதாக தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு முன்னரே பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு படையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.