நடுங்கவைத்த துப்பாக்கிச் சூடு: இளைஞர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமுல்
அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் நடந்த முன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர் இளைஞர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வந்துள்ளது மாகாண நிர்வாகம்.
விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 21 பேர்கள் காயம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயம்பட்ட அனைவரும் குணமடைந்து திரும்புவார்கள் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில், நகரின் டவுன்டவுன் பகுதியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாக மேயர் கவாலியர் ஜான்சன் கூறியுள்ளார்.
மேலும் 20 அல்லது அதற்கு குறைவான வயதுடைய அனைவரும் இரவு 11 மணிக்குள் நகரின் முக்கிய தெருக்களில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கட்டுப்பாடுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, நகரில் மேலதிக பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என மேயர் கவாலியர் ஜான்சன் கூறியுள்ளார்.
டீர் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதியில் இரவு 9.10 மணியளவில் நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 16 வயது சிறுமியும் அடங்குவர் என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதில் ஒருவர் கைதாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இரவு 11.09 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து பேர் ஆயுதம் ஏந்தியவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட 10 பேரில் காயமடைந்தவர்களும் அடங்குவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.