ராஜபக்சவினர் இருக்கும் அரசாங்கத்தில் எவ்வித பதவிகளை ஏற்க போவதில்லை
ராஜபக்சவினர் இருக்கும் அரசாங்கம் ஒன்றில் எவ்வித பதவிகளையும் ஏற்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொய்ப் பிரசாரங்கள் மூலம் மக்களை தவறாக வழி நடத்தும் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கம் ஒன்றில் எவ்வித பதவிகளையும் பெற்றுக்கொள்வதில்லை எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.
முழு இலங்கை மக்களும் அமைதியான அகிம்சை வழியிலான போராட்டத்தின் ஊடாக விடுக்கும் பிரதான கோரிக்கையை எந்த நிபந்தனையும் இன்றி நானும் ஆதரிக்கின்றேன்.
காலிமுகத் திடல் போராட்ட களத்தில் இருந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாட்டின் எதிர்கால சந்ததிக்காவும் குரல் கொடுக்கும் மக்கள் நல கோரிக்கை குறித்து உணர்ச்சிபூர்வமாக உணர்கின்றேன்.
ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைதியான பிரஜைகளான பிள்ளைகளை மனதார வாழ்த்திய நான், எந்த சந்தர்ப்பத்திலும் காலிமுகத் திடல் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ராஜபக்சவினரின் நெருக்கடியை தீர்க்கும் பங்காளியாக மாற மாட்டேன் எனவும் சரத் பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.