கனடாவில் வீடு புகுந்து நடந்த பகீர் சம்பவம்: புகைப்படம் வெளியிட்ட பொலிசார்
ஒன்ராறியோவின் ஹாமில்டன் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் ஒருவர் கடத்தப்பட்டதுடன், அவரின் மகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஹாமில்டன் பகுதியை சேர்ந்த 63 வயதான ஃபகீர் அலி என்பவரே மர்ம நபர்களால் கடத்தப்பட்டவர். வியாழக்கிழமை பகல் இவரது வீடு புகுந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் தாக்கியுள்ளது.
இதில் ஃபகீர் அலியின் ஒரு மகன் கொல்லப்பட்டதுடன், இன்னொரு மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ஃபகீர் அலியின் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும், அவரை பத்திரமாக மீட்பதே முதன்மையான பணி என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஃபகீர் அலி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். உள்ளூர் நேரப்படி 2.55 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவரை மீட்டுள்ளனர்.
அதே வயதுடைய இன்னொரு இளைஞரின் சடலத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். ஃபகீர் அலி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.