இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளை கலந்து கொடுப்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது: மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து கொடுப்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கனடாவில் முதல் டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அந்த தடுப்பூசி சிலருக்கு இரத்தக்கட்டிகளை உருவாக்குவது தெரியவந்துள்ளதால் வேறு நிறுவன தயாரிப்புகளுக்கு மாறிவருகின்றனர்.
ஆனால், இப்படி தடுப்பூசிகளை கலந்து கொடுப்பதால் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும் நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக உள்ளது.
அப்படி இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொண்டவர்கள் தற்போது பயம் நீங்கி நிம்மதியாக இருக்கலாம் என்று கூறும் ஹாமில்ட்டன் McMaster பல்கலைக்கழக பேராசிரியரான Dawn Bowdish, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிறார்.
இதே கருத்தையே பல கனேடிய அறிவியலாளர்களும் கூறியுள்ளதால் இனி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதால் கவலையடைந்துள்ளவர்களும், இரண்டு வகையான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களும் பயம் நீங்கி நிம்மதியாக இருக்கலாம்.