G7 மாநாட்டில் கனடா இந்திய பிரதமர்கள் சந்திப்பு: உயர் ஸ்தானிகர்களை மீண்டும் நியமிக்க முடிவு
கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மீண்டும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கனடாவும் இந்தியாவும் மீண்டும் புதிய உயர் ஸ்தானிகர்களை நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலரான விக்ரம் மிஸ்ரி இது குறித்து பேசும்போது, உயர் ஸ்தானிகர்களை மீண்டும் நியமிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது, இரு நாடுகளுக்கிடையிலான மிக முக்கியத்துவம் வாய்ந்த உறவின் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முதல் படியாகும் என்று கூறியுள்ளார்.
கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியின்போது, காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்ட விடயத்துடன் இந்தியாவை தொடர்பு படுத்த கனடா அரசு முயன்றதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்தியா கனடாவுக்கான தனது உயர் ஸ்தானிகரையும், ஐந்து தூதரக அதிகாரிகளையும் திருப்பி அழைத்துக்கொண்டதுடன், கனேடிய தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
இருநாடுகளுக்கிடையிலான தூதரக உறவு பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னியின் சந்திப்பைத் தொடர்ந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.