உலக அளவில் அதிகரிக்கும் குரங்கம்மை தொற்றாளர் எண்ணிக்கை: கனடாவில் எத்தனை பேர்?
கனடாவில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மொத்தம் 112 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒருவருக்கும், ஆல்பர்ட்டாவில் நால்வருக்கும், ஒன்ராறியோவில் ஒன்பது பேர்களுக்கும் கியூபெக்கில் 98 பேர்களுக்கும் குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் மட்டும் 98 பேர்களுக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குறிப்பிட்ட நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு மாகாண நிர்வாகம் பெரியம்மை தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளது.
ஜூன் 9 வரை, 1,622 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கியூபெக்கின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, ரொறன்ரோவில் 23 பேர்கள் குரங்கம்மை தொடர்பில் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதார நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கனடாவின் பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.