நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்துக்கொண்ட எம்.பி
பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈமெலி பெல்டனென் (Eemeli Peltonen) அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 30 வயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஈமெலி பெல்டனென், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உறுதிப்படுத்திய பிரதமர்
இதனை பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு சக பணியாளர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது துக்கமான செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த உறுப்பினரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈமெலி பெல்டனென், தனது சிறுநீரக நோய் காரணமாக அண்மைக் காலமாக மருத்துவ விடுமுறையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.