மேயர் தேர்தலில் போட்டியிடும் இரு நாய்கள்! கனடாவில் சுவாரஸ்யம்
கனடாவில் சுவாரஸ்யம் பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்கும் போதுதான் வாக்குச் சேகரிக்கக் கிளம்புவார்கள்.
ஆனால், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள 'கிட்டிமட்' நகராட்சித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையிலேயே, இரண்டு வேட்பாளர்கள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.
கஸ் மற்றும் கோகோ ஆகிய இரண்டு பேர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் இருவரும் மனிதர்கள் அல்ல... வாலையாட்டும் செல்லப் பிராணிகளான நாய்களாகும்.

ஆம், கிட்டிமட் நகராட்சியில் இந்த முறை மனிதர்களுக்கான மேயர் தேர்தலுடன் சேர்த்து, அதிகாரப்பூர்வமாக "நாய் மேயர்" (Dog Mayor) ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உண்மையான தேர்தலும் நடைபெறவுள்ளது.
தேர்தல் என்று வந்துவிட்டால் சும்மா இருக்க முடியுமா? கஸ் மற்றும் கோகோ ஆகிய இரு நாய் வேட்பாளர்களும் தங்களுக்குள் தனித்தனி அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த இரண்டு நாய் வேட்பாளர்களும் உள்ளூர் பாடசாலைகளுக்குச் சென்று குழந்தைகளைச் சந்திப்பதோடு, 'கனடா தின' அணிவகுப்பில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாய் மேயரைத் தேர்ந்தெடுக்கும் இந்த விசித்திரமான யோசனைக்கு பின்னால் நகராட்சி நிர்வாகத்தின் பெரியதொரு திட்டம் ஒளிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிட்டிமட் நகரில் தகுதியுடைய வாக்காளர்களில் வெறும் 21.7 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
இந்த மந்தமான நிலையை மாற்றி, இம்முறை தேர்தலில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முக்கியமாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே உள்ளூர் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே நகராட்சி இந்த உத்தியைக் கையாண்டுள்ளது.
தற்போது நகராட்சி அதிகாரிகள் இந்த நாய்களுடன் பாடசாலைகளுக்குச் சென்று, மேயர் மற்றும் நகரசபை உறுப்பினர்களின் பொறுப்புகள் என்ன, நகராட்சி எவ்வாறு இயங்குகிறது போன்ற விடயங்களை மாணவர்களுக்கு ஜாலியாகக் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.