100 ரூபாய் தர மறுத்த பெண்ணை கொலை செய்த நபர்
இரத்தினபுரி, ஹெலபாத்த மஹிராகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்ட 27 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பாக கேஹெல்ஹோவிட்டகம பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இந்த சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படுகிறது.
100 ரூபாய் கேட்ட சந்தேக நபர்
ஹெலபாத்த பிரதேசத்தில் வேலை செய்து வந்த பெண், அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஒரே இடத்தில் தொழில் செய்து வந்துள்ளதுடன் சம்பவம் நடந்த தினத்தில் கணவன் வேலைக்கு செல்லவில்லை.
சம்பவம் நடந்த தினம் பிற்பகல் பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த சந்தேக நபர், பெண்ணிடம் 100 ரூபாய் பணத்தை கேட்டுள்ளார்.
பணத்தை கொடுக்க பெண் மறுத்துள்ளதுடன் சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, அவரிடம் இருந்த பையை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மதுபானத்திற்கு அடிமை
மனைவி வீடு திரும்பாததால், அது பற்றி விசாரித்த கணவன், மனைவி வீட்டுக்கு அருகில் கத்தி குத்துக்கு இலக்காகி இருப்பதை கண்டு, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் மதுபானத்திற்கு அடிமையானவர் எனவும் மதுபானத்தை அருந்த பெண்ணிடம் பணத்தை கேட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் பொலிஸ் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.