மொத்த குடும்பத்தையும் தீர்த்துக்கட்டிய இந்தியர்... விசாரணை நெருங்கிய நிலையில் வெளியான தகவல்
மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொலை செய்து விசாரணையை எதிர்கொள்ள காத்திருந்த நபர், சிறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து தலைநகரமான டப்ளினில் கடந்த 2020 அக்டோபர் மாதம் 38 வயதான சமீர் சையத் என்பவர் தமது மனைவி சீமா பானு, 11 வயது மகள் அஸ்பிரா ரிசா மற்றும் ஆறு வயது மகன் பைசான் சையத் ஆகிய மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக சிரையில் இருந்து வந்தார்.
ஜூன் 15ம் திகதி முதல் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், லாவோஸ் கவுண்டியில் போர்ட்லாய்ஸில் பகுதியில் உள்ள மிட்லாண்ட்ஸ் சிறையில் வியாழக்கிழமை பிற்பகல் அவரது அறையில் இறந்து கிடந்தார்.
குறித்த தகவலை அயர்லாந்து சிறைத்துறையும் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
சையதின் பிள்ளைகள் இருவரும் கழுத்தை நெரிக்கப்பட்டு மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். சீமா பானு கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சமீப ஆண்டுகளில் தான் சையத் குடும்பம் இந்தியாவில் இருந்து அயர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளது. சீமா மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்றே அவரது உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு செல்லும் போதெல்லாம் உறவினர்கள் அனைவரையும் நேரில் சென்று நலம் விசாரிக்கும் குணம் கொண்டவர் சீமா எனவும், அயர்லாந்தில் இருந்தாலும் தொடர்புகொள்ள தயங்கமாட்டார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
துணிச்சல் மிகுந்தவர் சீமா. வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடியவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சீமாவின் தந்தை அப்துல் கஃபர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் இறந்துவிட்டார்.
தமது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஏற்பட்ட துயரத்தை எண்ணியே மனமுடைந்து அவர் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.