இலங்கைக்கு தபாலில் வரும் போதைப்பொருள்; சுங்கத்துறை எச்சரிக்கை
சர்வதேச தபால் உறைகள் ஊடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய தபால் உறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் அனுப்பும் முறையை கையாளுவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல்
கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு விசேட நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது தபால் உறைகள் மீதான சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினசரி அதிகளவிலான சர்வதேச தபால் பொதிகள் நாட்டிற்கு வருவதால் அனைத்தையும் முழுமையாக பரிசோதிக்க இயலாத சூழல் காணப்படுவதாகவும், எனவே சந்தேகத்திற்கிடமான பொதிகளை அடையாளம் காண நவீன ஆய்வுக் கருவி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ வகை போதைப்பொருள் அடங்கிய தபால் உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
தனித்தனி உறைகளில் அனுப்பப்படும் போதைப்பொருளின் அளவு குறைவாக இருந்தாலும், அவை இறுதியில் பயனாளிகளை சென்றடைந்து சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.