ரஷ்யாவை ஜி-20 அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்! பைடன் வலியுறுத்தல்
பிரசல்ஸில் நடந்த ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன்,
உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக, ரஷ்ய உயரடுக்குகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகளின் புதிய தொகுப்பை அறிவித்தார்.
மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன்,
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஜோ பைடன் பேசுகையில், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்.
இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் ரஷ்யாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜி-7 கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்தனர்.