கனடாவில் களவாடப்பட்ட 24 வாகனங்கள் மீட்பு
கனடாவின் மொன்க்டன் பகுதியில் திருடப்பட்ட 24 வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் நடத்திய பாரிய சோதனையில், பல மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கோடியாக் பிராந்திய பொலிஸார் கடந்த ஜனவரி மாதம் முதல் மேற்கொண்டு வந்த ரகசிய விசாரணையின் பலனாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 2-ஆம் திகதி அதிகாலை சுமார் 5 மணியளவில், மொன்க்டனின் ரொனால்ட் அவென்யூவில் உள்ள ஒரு சொகுசு வளாகத்தை நோக்கிப் பொலிஸார் அதிரடியாக நுழைந்தனர்.
இச்சோதனை நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து மொன்க்டன் தீயணைப்புத் துறை, விலங்கு நல அமைப்பு, மின்சாரத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினரும் கூட்டுப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 நாட்களாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட சோதனையில் பின்வருபவை பறிமுதல் செய்யப்பட்டன:
26 திருடப்பட்ட வாகனங்கள், 1 கிலோ கொக்கைன் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள், 13 துப்பாக்கிகள் மற்றும் 4 தடைசெய்யப்பட்ட அதிநவீன துப்பாக்கிகள், பெருமளவிலான கனடிய டொலர் பணம் என இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இச்சோதனையின் போது சம்பவ இடத்திலேயே கெவின் ட்ரைட்ஸ் என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின் போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கைது செய்யப்பட்ட கெவின் ட்ரைட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை மொன்க்டன் மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மீது ஏற்கனவே இருந்த 4 குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து, மேலும் 38 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இவருக்கு, வரும் வியாழக்கிழமை பிணை விசாரணை நடைபெறவுள்ளது.