தமிழகத்தில் மாணவர்களை பலியெடுக்கும் நீட் தேர்வு!
நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் வேலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதற்கிடையில், தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தவறான முடிவை எடுத்துவருகின்றனர். அந்தவகையில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு மாணவி நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சவுந்தர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். எனினும் சரியாக எழுதவில்லை , மதிப்பெண் குறையும் என்று தவறான எண்ணத்தால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாணவி சவுந்தர்யா இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.