நேபாள விமான விபத்து... 67 சடலங்கள் மீட்பு: துக்க தினம் அனுசரிப்பு
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 72 பேர்களுடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் இதுவரை 67 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தரையிறங்க விமான நிலையத்தை நெருங்கிய விமானமானது, கட்டுப்பாட்டை இழந்து சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்ததும் பிரதமர் புஷ்ப கமல் தால் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது. விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என தகவல் வெளியாகியுள்ளது.