கனடாவில் விரைவில் அமுலுக்கு வரவுள்ள புதிய பயண விதிமுறைகள்!
கனேடிய அரசாங்கம் விரைவில் புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவதாக அறிவித்துள்ளது. அதன்படி மிக விரைவில் விமான நிலையங்களில் இருந்தும், ரயில்களிலும் பயணிக்கும் யாராக இருப்பினும் கட்டாயம் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகளின் முதற்கட்டம் வரும் அக்டோபர் 30-ஆம் திகதி முதல் தொடங்கும் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் கூட்டாட்சி-ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து முறைகளை பயன்படுத்த கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.
இது, கனேடிய விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள், விஐஏ ரயில் மற்றும் ராக்கி மவுண்டனீர் ரயில்களில் ரயில் பயணிகள் மற்றும் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களில் பயணிக்கும் கப்பல் பயணிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை தடுப்பூசி போடும் பணியில் இருக்கும் பயணிகளுக்கு 30 நாள் அவகாச காலம் கொடுக்கப்படும் என்றும், தடுப்பூசி போடப்படாத பயணிகள், புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் செல்லுபடியாகும் COVID-19 மூலக்கூறு சோதனையைக் காட்டினால் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
இதேவேளை , நவம்பர் 30 வரைமட்டுமே இந்த தளர்வுகள் எனவும் , அதற்குள் அனைத்து பயணிகளும் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் விதிவிலக்குகள் அவசர பயணத்திற்கு மட்டுமே இருக்கலாம், மற்றும் மருத்துவ ரீதியாக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு விலக்கு உண்டு.
இந்த புதிய கட்டளையானது தொலைதூர சமூகங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக இன்னும் பயணிக்க முடியும் எனவும் , இது குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும். சலுகை மற்றும் விருந்தோம்பல் தொழிலாளர்கள், ரயில்வே, ரயில் ஊழியர்கள், டிராக் ஊழியர்கள் மற்றும் கடல் போக்குவரத்து ஆபரேட்டர்கள் உட்பட விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்தக் கொள்கை பொருந்தும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் முழுமையாக தடுப்பூசி போடாத ஊழியர்கள் வேலை செய்ய இயலாது. போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர் இணங்கத் தவறினால், ஒவ்வொரு மீறலுக்கும் $ 5,000 டொலர் முதல் 250,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.