நியூயார்க் நகரில் அரங்கேறிய கண்கவர் விமான கண்காட்சி
அமெரிக்காவின் நியூயார்க்கில் அந்நாட்டு விமானப்படையின் கண்கவர் விமான சாகச கண்காட்சி நடைப்பெற்றது. லாங் ஐலண்ட் என்ற இடத்தில் உள்ள ஜோன்ஸ் கடற்கரையில் இந்த சாகச கண்காட்சி நடைபெற்றது.
இதில் அமெரிக்க வான் படையின் தண்டர் போர்ட்ஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த சாகசத்தை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜோன்ஸ் கடற்கரையில் குழுமி இருந்தனர். விமானங்கள் சாகசம் செய்வதை பார்த்த அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாத வார இறுதி நாட்களில் நடத்தப்படும்.
இந்த விமான சாகசம், மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடத்தப்பட்டது. இது கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். பார்ப்போரை பரவசப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த விமான சாகச கண்காட்சி கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட இருந்த கண்கவர் வான் சாகசம், தீவிரமான கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.