வெள்ள பாதிப்பு காரணமாக நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்
நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நியூசிலாந்தில் பல இடங்கள் ஏற்கனவே வெள்ளக்காடாக மாறி இருந்தன. இந்த நிலையில் இப்போது மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது .இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள ஹாஸ்பர்ட்டின் ஆற்றில் ஏற்கனவே அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்றது.
இப்போது ஆற்றின் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழை வெள்ளத்தால் கிறிஸ்ட் சர்ச், கேன்டர்பரி நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து மழை பெய்வதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்ப்பதால் நியூசிலாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ராணுவமும் மீட்புப் படையினரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.