நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் அரசுப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் டில்லபெரி மாகாணத்தில் உள்ள தைய்ம் என்ற கிராமத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு பயங்கரவாதி கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த பயங்கரவாதி கிராமத்தை விட்டு உடனடியாக தப்பிச்சென்றுவிட்டான்.
பயங்கரவாதி நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.