வடகொரியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை: எழுந்த பெரும் சந்தேகம்
வடகொரியாவில் மொத்தமுள்ள 26 மில்லியன் குடிமக்களில் 10% பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை தொடர்பில் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவில் கொரோனா பரவல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
2019 முதல் சுமார் இரண்டாண்டு காலம் கொரோனா பரவல் இல்லாத நாடு என மார்தட்டி வந்த வடகொரியா, கடந்த வாரத்தில் கொரோனா பரவல் தொடர்பில் முதன் முறையாக தகவல் வெளியிட்டது.
மேலும், மர்ம காய்ச்சல் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது என மட்டுமே குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, நாள்தோறும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையை அரசு ஊடகம் வாயிலாக வெளியிட்டும் வந்துள்ளது.
ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்பில் அவர்கள் தகவல் வெளியிட மறுத்து வந்துள்ளனர். மேலும் தற்போது இறப்பு எண்ணிக்கை தொடர்பிலும் உண்மையான தரவுகளை வெளியிட வடகொரியா மறுத்து வருவதாகவே தெரிய வந்துள்ளது.
இது நிபுணர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வடகொரியா மிகுந்த ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், மேலும் 263,370 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும், மொத்தம் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 2.24 மில்லியனாகவும் இறப்பு எண்ணிக்கை 65 எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 754,810 மக்கள் காய்ச்சல் தொடர்பில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.