3 நாட்களில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு! பீதியில் வடகொரியா
வடகொரியாவில் 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் 42 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்தது இல்லை.
ஆனால் இப்போது அங்கும் இந்த தொற்று பரவ தொடங்கி உள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12-ம் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
கடந்த ஏப்ரல் கடைசியில் இருந்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிற நிலையில், கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்து உள்ளது.
தொடர்ந்து 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சையில் உள்ளனர் என வடகொரியாவில் இருந்து வெளிவரும் அரசு ஊடக செய்தியான கே.சி.என்.ஏ. தெரிவிக்கின்றது.
இதுதவிர, கூடுதலாக 15 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து உள்ளது.
இதனை தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து மாகாணங்கள், அனைத்து நகரங்கள் மற்றும் கவுன்டி பகுதிகளிலும் முழு அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பணி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இல்லாத வகையில் மூடப்பட்டு உள்ளன என்றும் கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
இதுபற்றி வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் (Kim Jong-un) கூறும்போது,
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு தோற்றுவித்ததில் இருந்து இதுவரையில், நாட்டில் பரவி வரும் கொடிய நோயானது பேரிடராக உள்ளது என கூறியுள்ளார்.