ராணுவ ஆட்சியால் தவிக்கும் மியான்மர் ; 500 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
மியான்மரில் ராணுவத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 1ம் திகதி முதல் மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அந் நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 500 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு பிறகு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.
மியான்மரின் வடக்கு கரேன் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், ஒரு குழுவாக ஆயுதம் ஏந்தி, ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மியான்மர் ராணுவம், கரேன் மாவட்டத்தில் பழங்குடியின மக்களை குறிவைத்து, விமானங்கள் வாயிலாக வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, அங்குள்ள மக்கள் அண்டை நாடான தாய்லாந்துக்குள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.