மியன்மார் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்த அமெரிக்கா
மியன்மாரில் இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியன்மார் மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க தயராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தீவிர ஆய்வுக்கு பிறகு ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை’ என்ற முடிவின் கீழ் மியன்மார் நாட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் தெரிவித்தார்.
இதன்படி, மியான்மர் மக்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களையும் இராணுவம் சிறை வைத்துள்ளது.
இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துவிட்டது.
எனினும் , போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வரும் நிலையில் பல நாடுகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.