தண்ணீர் கேட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள்!
ஈரானில் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது அந்நாட்டு பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடும் வெயிலினால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் முடியாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
ஈரான் நாட்டின் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக நிலவுவதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுபோயுள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தாலும் நீரை வழங்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி வன்முறை சம்பவங்களிலும் இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளார்கள்.
இதனையடுத்து ஈரான் நாட்டின் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்தும் கூட பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசாங்கம் பெரும் இக்கட்டில் உள்ளது.