கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் Omicron: வெளியான புதிய ஆய்வறிக்கை
கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடை விடவும் உருமாறிய ஓமிக்ரான் 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்று ஹொங்ஹொங் பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
புதிதாக உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் ஓமிக்ரான் தொற்று, ஏற்பட்ட 24 மணி நேரத்தில் நுரையீரலில் பரவி விடுகிறது. குறித்த தகவலானது ஹொங்ஹொங் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் சேன் சி வாய் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குறித்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர். ஓமிக்ரான் வேகமாகப் பரவி நுரையீரலுக்குள் நுழைந்தாலும் அது நுரையீரல் திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்துவது என்பது இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடை விட 10 மடங்கு குறைவு எனக் கண்டறிந்துள்ளனர்.
இதனால், ஒரு தனிநபரிடம் இருந்து மற்றவருக்கு ஓமிக்ரான் பரவும் வேகம் மற்ற உருமாறிய தொற்றுகளைவிட 70 மடங்கு அதிகம் என்றாலும் கூட அது நோய் பாதிப்பு ஏற்படுத்தும் தீவிரம் ஒப்பீட்டு அளவில் மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் மாறுபாடு தற்போது 77 நாடுகளில் பரவி உள்ளது. தென் ஆபிரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் 77 நாடுகளுக்குப் பரவி இருப்பது அதன் பரவும் தீவிரத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிகம் பரவும் இந்த புதிய உருமாறிய வைரஸ் மற்ற திரிபுகளை ஒடுக்கி கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் ஹொங்ஹொங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.