பெண்ணொருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபர்!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே ஹோட்டல் நடத்தி வந்த பெண்ணை நபரொருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவருவது,
தக்கலை அருகே உள்ள வேர்க்கிளம்பி, காப்புவிளையை சேர்ந்தவர் 45 வயதான விஜயகுமாரி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து மகனோடு தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும் இரவிபுதூர்கடையை சேர்ந்த 55 வயதான சேக் முகம்மது என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சேக் முகமது தக்கலை அருகே மணலியில் சாலையோரம் தள்ளுவண்டியில் ஓட்டல் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த ஓட்டலை விஜயகுமாரியும் அவரது மகனும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஓட்டலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கொடுக்கவில்லை என சேக் முகமது தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று காலையில் விஜயகுமாரி ஓட்டலில் நின்ற போது அங்கு வந்த சேக் முகமது, அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த விஜயகுமாரி ஆசாரிபள்ளம் அரசு வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தக்கலை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.