கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு
கனடாவின் கிரேட்டர் சட்பரி நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குரோலி ஏரியில் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல்போன 26 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகு கவிழ்ந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து, சட்பரி பொலிஸார், தீயணைப்புப் படை மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்தக் கரோட் படகில் மூன்று பேர் பயணித்த நிலையில், அது திடீரென ஏரியில் கவிழ்ந்தது. அப்பகுதியில் கயாகிங் சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள், நீரில் மூழ்கிய இருவரைக் காப்பாற்றிப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

எனினும், படகில் இருந்த 26 வயது இளைஞர் மற்றும் படகைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து, ஏரி நீரிலும் கடற்கரைப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஒன்ராறியோ மாகாண பொலிஸின் ஹெலிகாப்டர் மற்றும் சட்பரி பொலிஸின் ட்ரோன் ஆகியவை மூலம் வான்வழித் தேடுதலும் நடத்தப்பட்டது.
பின்னர் கவிழ்ந்த படகு மீட்கப்பட்டபோதிலும், இளைஞரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலின் பலனாக, ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அந்த இளைஞரின் உடலை ஏரியிலிருந்து மீட்டனர்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்த இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.