இசை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி: குற்றத்தை ஒப்புக்கொண்ட கனடிய தம்பதி
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் 'ஈராஸ் டூர்' இசை நிகழ்ச்சிக்கு போலி டிக்கெட்டுகளை விற்று, பொதுமக்களை 265,000 டாலருக்கும் மேல் ஏமாற்றிய கனடிய தம்பதியினர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
வழக்கில் டெனிஸ் டிசோர் மற்றும் அவரது கணவர் டேவிட் பிளேக் ஆகிய இருவர் மில்டன் நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த 2024 நவம்பரில் டொராண்டோவின் ரோஜர்ஸ் சென்டரில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 6 பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்காக, ஆகஸ்ட் 2023 முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் தெற்கு ஒன்டாரியோவைச் சேர்ந்த 107 பேர் டெனிஸ் டிசோரை நம்பி அவரிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களது குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வழங்குவதற்காக இந்த டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
ஆனால், கச்சேரி நெருங்கிய நிலையிலும் டிக்கெட்டுகள் வந்து சேராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
ஆரம்பத்தில், தன்னிடம் இருந்த பணத்தை யாரோ ஒரு மூன்றாவது நபர் திருடிவிட்டதாக டெனிஸ் டிசோர் நாடகமாடினார்.
ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின்படி, இதில் எந்தவொரு மூன்றாவது நபரும் சம்பந்தப்படவில்லை என்பதும், திட்டமிட்டே இந்த தம்பதி பொதுமக்களை ஏமாற்றியதும் அம்பலமாகியுள்ளது.
மக்களிடமிருந்து ஏமாற்றிய பணத்தில் சுமார் 139,144 டொலரை பல்வேறு ஆன்லைன் சூதாட்ட தளங்களில் இவர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.
மேலும், அதே காலகட்டத்தில் ஏடிஎம் (மூலமாக 297,000 டொலருக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிடம் பேச மறுத்த டெனிஸ், தனது முகநூல் பக்கத்தில், "நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கடுமையான சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன்.
அது என் வாழ்க்கையையே முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நினைத்து நான் தினமும் வருந்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.