விமான பயணத்திற்காக ஓட்டுநர் உரிமம்... ஒன்ராறியோ தம்பதிக்கு ஏற்பட்ட சிக்கல்
ஓட்டுநர் உரிமம் காலாவதியானதால் விமான பயணத்திற்கு அனுமதிக்க முடியாது என ஒன்ராறியோ தம்பதியை விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கில்கிறிஸ்ட் மற்றும் அவரது கணவர் ஸ்டூவர்ட் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு குடும்ப இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டு எட்மண்டனுக்கு செல்ல வேண்டியிருந்தது.
இந்த நிலையில், ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் சென்ற குறித்த தம்பதி அடையாள அட்டையாக தங்கள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கியுள்ளனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், குறித்த ஓட்டுநர் உரிமம் காலாவதியானதாகவும், தங்களை பயணத்திற்கு அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தற்போது காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் உட்பட அனைத்து அடையாள அட்டைகளுக்கும் 2022 பிப்ரவரி 28ம் திகதி வரையில் ஒன்ராறியோ நிர்வாகம் கால அவகாசம் அளித்திருக்கிறது.
ஆனால், குறித்த அடையாள அட்டைகளை விமான பயணத்திற்கு பயன்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் விமான பயணங்களுக்கு கனேடிய கடவுச்சீட்டு தேவை இல்லை என்பதால் குறித்த தம்பதி அதையும் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இணையம் வாயிலாக தங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் மருத்துவ அட்டையை அவர்கள் புதுப்பித்துள்ளனர். இருப்பினும், குறித்த தம்பதியை விமான நிலைய நிர்வாகிகள் பயணத்திற்கு அனுமதிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உறவினர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாமல் அவர்கள் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.