cryptocurrency தொடர்பில் பெருந்தொகையை இழந்த இரு கனேடிய பெண்கள்
ஒன்ராறியோவை சேர்ந்த இரு பெண்கள் cryptocurrency முறைகேடு ஒன்றில் சிக்கி மொத்தமாக 100,000 டொலருக்கும் அதிகமான தொகையை இழந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரொறன்ரோவை சேர்ந்த லீ என்பவர் பேஸ்புக நண்பர் மூலமாகவே, cryptocurrency வர்த்தகம் தொடர்பில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த நண்பரின் ஆலோசனையின் கீழ் cryptocurrency வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறும் லீ, தொடக்கத்தில் தாம் முதலீடு செய்த 2,000 டொலர் தொகை பல மடங்கு அதிகரித்ததை அறிந்து, நண்பர் கேட்டுக்கொண்டதால் மீண்டும் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒருகட்டத்தில் அதுவரையான சேமிப்பு தொகை மட்டுமின்றி, நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கியும் cryptocurrency வரத்தகத்தில் முதலீடு செய்துள்ளதாக லீ கூறியுள்ளார்.
மொத்தம் 24,000 டொலர் முதலீடு செய்துள்ள நிலையில், லாபத்தொகையை எடுக்க முயன்ற போது, 5,000 டொலர் வரியாக செலுத்த வேண்டும் என லீயிடம் அந்த நண்பர் கூறியுள்ளார். மட்டுமின்றி, வர்த்தக நிறுவனத்திற்கும் 5,000 டொலர் செலுத்தினால் மட்டுமே லாபத்தொகையை கைப்பற்ற முடியும் எனவும் அந்த பேஸ்புக் நண்பர் லீயிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று லீயின் cryptocurrency கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் இதுவரை முதலீடு செய்த 24,000 டொலர் தொகை கைவிட்டுப் போனது. அப்போது தான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக லீ உணர்ந்துள்ளார்.
இதே நிலை தான் ரொறன்ரோவை சேர்ந்த மெல் என்பவருக்கும் ஏற்பட்டுள்ளது. டேட்டிங் தளம் வாயிலாக அறிமுகமானவர் அளித்த ஆலோசனையின்படி மெல் கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 80,000 டொலர் cryptocurrency வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார்.
தற்போது மெல் என்பவரும் மொத்த சேமிப்பு தொகையையும் இழந்து, ஏமாந்த நிலையில் உள்ளார். cryptocurrency வர்த்தகத்தில் ஈடுபடுவோர் இதுபோன்ற முறைகேடுகளில் சிக்க வேண்டாம் எனவும், உரிய செயலிகள் அல்லது இணைய பக்கம் ஊடாக மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் நிபுணர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெல் மற்றும் லீ ஆகிய இருவரும் மொத்தமாக 100,000 டொலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.
இழந்த இந்த தொகை தொடர்பில் சட்டப்போராட்டத்தில் ஈடுபடவும் முடியாது என்பது இவர்களுக்கு கிடைத்த இன்னொரு பேரிடியாக பார்க்கப்படுகிறது.