2 இளைஞர்களை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்! விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை அடுத்த வெடியங்காடு புதூர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 19 வயதான பிரசாந்த், 22 வயதான பிரதாப். இவர்களும் அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள், இளைஞர்களும் கஞ்சாவுக்கு அடிமையாகி திரிந்து வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை புதூர்மேடு அருகே பிரதாப் உள்ளிட்ட சிலர் கஞ்சாவைப் பயன்படுத்தி போதையில் இருந்துள்ளனர்.
அப்போது அவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 17 வயது சிறுவன் ஒருவன், பிரதாப்பையும் பிரசாந்த்தையும் கழுத்து மற்றும் முதுகில் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். கொலை செய்த 17 வயது சிறுவன் மற்றும் 19 வயதான பரத்ராஜ் இருவரையும் பொலிஸார் பிடித்து விசாரித்த போது பகீர் தகவல்கள் வெளியாகின. பெங்களூருவில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒரு கொலை வழக்கில் சிக்கி அதில் இருந்து வெளியே வந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். பெங்களூருவில் இருந்து வரும்போது 2000 ரூபாய்க்கு கஞ்சாவும் ஒரு சிறிய கத்தியும் வாங்கி வந்துள்ளார்.
பிரதாப் மற்றும் பிரசாந்த் இருவரும் சிறுவன் வைத்திருந்த போனை விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கூறி வாங்கிக் கொண்டனர், 10 நாட்களில் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவனும் பிரதாப், பிரசாந்த் மற்றும் பரத்ராஜ் உள்ளிட்டோரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர். அப்போது செல்போனுக்கான பணத்தை சிறுவன் கேட்க அது தகராறாகியுள்ளது. பிரதாப்பும், பிரசாந்தும் சிறுவனை அடித்துள்ளனர்.
என்னை அடிக்க வேண்டாம். கத்தியால் குத்தி விடுவேன் என சிறுவன் மிரட்டியும் இருவரும் கேட்காமல் மீண்டும் அடித்துள்ளனர். ஆத்திரமடைந்த சிறுவன், பிரதாப்பின் கழுத்தில் கத்தியால் குத்த, அவர் அங்கேயே விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த பிரசாந்த், பிரதாப்பைத் துாக்குவதற்காக குனியும்போது அவரது முதுகிலும் சிறுவன் கத்தியால் குத்த அவரும் உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பரத்ராஜைக் கைது செய்த போலீசார், சிறுவனை கூர்நோக்ககத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திருத்தணி சுற்றுவட்டாரங்களில் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சாவைத் தடை செய்தால் மட்டுமே, இளைஞர்களின் வாழ்வைக் காப்பாற்ற முடியும்.
இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடராமல் தடுக்க முடியும் என்கின்றனர் பகுதிவாசிகள். பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா?